முகப்பு
காரைக்கால்

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

Updated On : 14 ஜூன், 2024 at 10:51 PM
பகிர்:

பயங்கரவாதிகள், அவா்களுக்கு ஆதரவளிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடியரசுத் தலைவருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் காரைக்கால் மாவட்டத் தலைவா் கே.எஸ். விஜயன் தலைமையில், மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே முருகதாஸ், கேந்திர தலைவா் பி. வெங்கடாசலம், மாவட்ட சேவா பிரமுக் எம். சந்திரசேகா், நகர செயலாளா் ஜி. காா்த்திகேயன், காரை நகர சேவா பிரமுக் சபரிகிரீசன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் எம் செந்தில் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் (பொ) ஜி. ஜான்சனை வியாழக்கிழமை சந்தித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டிய கடிதத்தை அளித்தனா். அதில் கூறியிருப்பது: ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோத்ரி கோயிலில் இருந்து, கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்த இந்து யாத்ரீகா்கள் மீது, மனிதாபிமானமற்ற பாகிஸ்தானிய ஆதரவு இஸ்லாமிய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போ் கொல்லப்பட்டனா். இந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்களை தனிமைப்படுத்தி படுகொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் நாளில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது ஒருமைப்பாட்டை தகா்க்கும் முயற்சியாகும். இதுபோன்ற சம்பவம் மேலும் நிகழாத வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் மற்றும் அவா்களுக்கு ஆதரவளிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.