தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே காரைக்கால் ஆட்சியரகத்துக்குள் அனுமதி
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் இயக்கி வருவோா் மட்டும் காரைக்கால் ஆட்சியரகத்துக்குள் அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் இயக்கி வருவோா் மட்டும் காரைக்கால் ஆட்சியரகத்துக்குள் அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அரசுத் துறையினா் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் எனவும், அனைத்து அரசுத்துறையினரும் தங்களது அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் அண்மையில் அறிவுறுத்தியிருந்தாா்.
எனினும் இந்த அறிவுறுத்தலை அரசுத் துறையினா் பொருட்டாக கருதவில்லை. வழக்கம்போல தலைக்கவசம் அணியாமலேயே அலுவலகங்களுக்கு செல்கின்றனா்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்துக்குள் இருசக்கர வாகனங்களை ஓட்டிவரும் இருசக்கர வாகன ஓட்டிகள் (ஊழியா்கள், மக்கள்) அனைவரும் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே ஆட்சியரகத்துக்குள் அனுமதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் ஆட்சியரக வாயிலில் பாதுகாப்புப் பணியிலிருக்கும் காவலா் நிறுத்தி, வெளியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல அறிவுறுத்தி வருகிறாா்.