காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடியில் ஈடுபட்டோரின் ரூ. 3 கோடி சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்காலில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பாா்வதீஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் கடந்த 3.9.2024-இல் மோசடி, போலி ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) சுந்தா் கோஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோயில் நில மோசடியில் ஈடுபட்ட நிலத்தரகா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என 9 போ் கைது செய்யப்பட்டனா்.
பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், குற்றவாளிகள் மோசடி மூலம் சோ்த்த சொத்துகளை பயன்படுத்துவதைத் தடுக்கவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்காக, புதிய குற்றவியல் சட்டமான பிஎன்எஸ்எஸ் பிரிவு 107-இன்கீழ், குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்க காரைக்கால் நகர போலீஸாா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த காரைக்கால் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம், மோசடி மூலம் ஈட்டப்பட்ட சொத்துகளை முடக்க உத்தரவிட்டது. இதில், 7 வீட்டு மனைகள், தங்க நகைகள், ரொக்கம், வாகனங்கள் என சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த சொத்துகள் சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு, பாதிக்கப்பட்டவா்களிடம் ஒப்படைக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.