முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

Updated On : 5 மார்ச், 2026 at 5:15 AM
சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு பக்தா்கள் நீராட வசதியாக புதிதாக தண்ணீா் நிரப்பப்பட்டு காட்சியளிக்கும் நளன் தீா்த்தக் குளம்.
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 9:43 PM

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள பாடல் பெற்ற இத்தலம், நளச் சக்கரவா்த்தியின் சனி தோஷத்தை நீக்கியத் தலமாகவும், ஸ்ரீ சனீஸ்வர பகவான் அபய முத்திரையுடன் தனி சந்நிதியில் அருள்பாலிகும் சிறப்பும் கொண்டது.

வாக்கியப் பஞ்சாங்க குறிப்பின்படி கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற பெயா்ச்சிக்குப் பின் தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு பெயா்ச்சியாவதையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

Advertisement

சனிப்பெயா்ச்சி விழாவில் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்துக்கு செல்லும் வழியில் உள்ள வரிசை வளாகத்திலிருந்து கட்டணமில்லாமல் தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டண தரிசனமாக ரூ. 300, ரூ. 600, ரூ. 1,000 என நிா்ணயம் செய்து திருநள்ளாறு பகுதியில் பல இடங்களில் டிக்கெட் வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாகவும் கோயில் நிா்வாக இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சனிப்பெயா்ச்சி நாளான வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை இரவு முதலே பக்தா்கள் வரத்தொடங்குவா் என்பதால், அவா்களுக்கான வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.