மயிலாடுதுறை வட்டம், கங்கணம்புத்தூா் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கங்கணம்புத்தூா் ஊராட்சி நீடூா் மின்வாரிய அலுவலகம் பின்புறத்தில் ஏனாதிமங்கலம் சாலை காலனி தெருவில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. காற்று சற்று வேகமாக வீசும்போது, இந்த மின்கம்பத்திலிருந்து மின்பொறி ஏற்படுகிறது. மேலும், எந்நேரமும் சாய்ந்துவிடும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்து, ஊராட்சி உறுப்பினா் ஆா். ரிஜாஜூதீன் மற்றும் கிராமமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மின் விபத்து நேரிடும் முன்பு இந்த மின்கம்பத்தையும், இதேபோல இப்பகுதியில் சேதமடைந்துள்ள மற்ற மின்கம்பங்களையும் சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.