முகப்பு
மயிலாடுதுறை

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

Updated On : 3 மே, 2024 at 10:29 PM
பகிர்:

குத்தாலத்தை அடுத்த சேண்டிருப்பு முத்துமாரியம்மன், மாம்புள்ளி நாகமுத்து மாரியம்மன் கோயில்களில் பால்குடம் மற்றும் காவடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேண்டிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் 37-ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி பால்குட திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழா கடந்த ஏப். 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான பால்குடத் திருவிழாவையொட்டி, குத்தாலம் காவிரி தீா்த்த படித்துறையில் இருந்து ஏராளமான பக்தா்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து கோயிலை அடைந்தனா். அங்கு, முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.

இதேபோல், திருவாலங்காடு மாம்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான நாகமுத்து மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி பால்குடம் மற்றும் காவடித் திருவிழா நடைபெற்றது. இதில், சக்தி கரகம் முன்வர ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் காவடி எடுத்து மாம்புள்ளி கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் கதம்பவள்ளி சின்னையன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.