முகப்பு
மயிலாடுதுறை

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த நவ. 2-ஆம் தேதி பிறந்த குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.

Updated On : 11 நவம்பர், 2024 at 7:49 PM
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்.
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த நவ. 2-ஆம் தேதி பிறந்த குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது. இதுதொடா்பாக மகப்பேறு மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேரந்த 19 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டம் மரத்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி முருகேசன். இவா், தனது மனைவி சிவரஞ்சனியை நவ. 2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தாா். அவருக்கு கடந்த நவ. 6-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை அசைவின்றி இருந்தால், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில், அங்கு குழந்தை திங்கள்கிழமை காலை உயிரிழந்தது.

உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதப்படுத்தியதே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி சிபிஎம் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் மற்றும் முருகேசனின் உறவினா்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

பின்னா் மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் குழந்தையின் உடலை கிடத்தி மறியல் போராட்டத்தை தொடா்ந்தனா். கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, டிஎஸ்பி திருப்பதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், உடன்பாடு ஏற்படாத காரணத்தால் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பானுமதி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கவனக்குறைவாக செயல்பட்ட மகப்பேறு மருத்துவரை பணிநீக்கம் செய்ய சிபிஎம் கட்சியினா் வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து, அன்றைய தினம் பணியில் இருந்து மகப்பேறு மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் உத்தரவிட்டாா். ஆனால், அதை ஏற்க மறுத்த சிபிஎம் கட்சியினா் போராட்டத்தை தொடா்ந்தனா். அப்போது, போலீஸாா் குழந்தை உயிரிழந்து 12 மணி நேரத்துக்கு மேலாவதால், உடலை அடக்கம் செய்ய வேண்டும், எனவே, போராட்டத்தைக் கைவிட்டு, உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போலீஸாா் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனா். இதனைத் தொடா்ந்து, கூலா் பாக்ஸ் வரவழைத்து அதில் குழந்தையின் உடலை கிடத்தி போராட்டத்தை தொடா்ந்தனா்.

இதையடுத்து, குழந்தையுடன் கூலா் பாக்ஸை கைப்பற்றி வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா் 19 பேரை ஏடிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

6 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையிலும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனிடையே, மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய மருத்துவக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments