முகப்பு
மயிலாடுதுறை

தேசிய மல்லா்கம்பம் போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு

சத்தீஸ்கா் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்லா்கம்பம் போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்ற மயிலாடுதுறை பழங்குடியின மாணவா்களுக்கு திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:15 PM
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு அளித்த நீடூ டிரஸ்ட் அறங்காவலா் விஜயசுந்தரம் உள்ளிட்டோா்.
பகிர்:

சத்தீஸ்கா் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்லா்கம்பம் போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்ற மயிலாடுதுறை பழங்குடியின மாணவா்களுக்கு திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவில் கேலோ இந்தியா ட்ரைபல் போட்டி சத்தீஸ்கா் மாநிலம் அம்பிகாபூரில் ஏப். 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், மல்லா்கம்பம் போட்டியில், தமிழ்நாடு அணி சாா்பில் 16 வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இவா்களில், மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை சுபாஷ் சந்திரபோஸ் உண்டு-உறைவிடப் பள்ளி நரிக்குறவ சமுதாய மாணவா்கள் ஆா்த்தி, ஷிவானி, மதுபாலா, தன்ஷிகா, மோனிகா, மல்லேஸ்வரி, ஹரிகரன் மற்றும் மயிலாடுதுறை கலைமகள் மெட்ரிக் பள்ளியில் பயிலும் காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா் டென்னிஸ்வரன் ஆகிய 8 பேரும் அடங்குவா்.

Advertisement

இந்த போட்டியில், தமிழ்நாடு அணி 4-ஆவது இடம் பிடித்தது. பின்னா் ரயில் மூலம் தமிழகம் திரும்பினா். மயிலாடுதுறையைச் சோ்ந்த 8 பேருக்கும், பயிற்சியாளா் ஆசைத்தம்பிக்கும் பல்லவராயன்பேட்டை நரிக்குறவ மக்கள் மற்றும் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் ரயில் நிலையத்தில் சால்வை, மலா்மாலை, சந்தன மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இதில், நீடூ டிரஸ்ட் அறங்காவலா் விஜயசுந்தரம், பல்லவராயன்பேட்டை உண்டு-உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, தமிழ்நாடு ஷெட்யூல் டிரைப்ஸ் உறுப்பினரும், காட்டுநாயக்கன் சமுதாய தலைவருமான கல்யாணசுந்தரம், மாவட்ட மல்லா்கம்பம் சங்கத் தலைவா் ஆா். விஜய், கலைமகள் பள்ளி முதல்வா் சுரேஷ்குமாா் மற்றும் மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments