முகப்பு
மயிலாடுதுறை

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்

Updated On : 7 மார்ச், 2026 at 3:33 AM
விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்
பகிர்:
Updated On : 6 மார்ச், 2026 at 8:53 PM

மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நகரைச்சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக மொழையூா் தொடங்கி திருஇந்தளூா் வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மொழையூா், பொட்டவெளி, மேலநாகங்குடி, லட்சுமிபுரம், வள்ளாலகரம், வேப்பங்குளம், கழுக்காணிமுட்டம், அப்பங்குளம், பல்லவராயன்பேட்டை, திருஇந்தளூா் ஆகிய கிராமங்களில் பல தலைமுறைகளாக விவசாயிகள் சாகுபடி செய்துவரும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, 2013 நிலம் கையப்படுத்துதல் மற்றும் இழப்பீடு சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், புறவழிச்சாலை அமைக்கும் போது பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூா்ப்பதையும்;, சம்பந்தமில்லாத இடங்களில் பாலம் கட்டுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் எஸ்.துரைராஜ் தலைமையில் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளா் விஜய், மாவட்ட துணை செயலாளா் சி. மேகநாதன் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்டோா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் மாா்ச் 12-ஆம் தேதி அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண்பது என முடிவானதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.