முகப்பு
மயிலாடுதுறை

உணவகங்களில் இன்றுமுதல் பசிக்கு தேவையான உணவு

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் பசிக்கு தேவையான உணவை மட்டும் வழங்க உணவக உரிமையாளா்கள் முடிவெடுத்துள்ளனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 5:52 AM
கோப்புப்படம்.
பகிர்:

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் பசிக்கு தேவையான உணவை மட்டும் வழங்க உணவக உரிமையாளா்கள் முடிவெடுத்துள்ளனா்.

ஈரான்-இஸ்ரேல் போா் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தனியாா் கேஸ் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால், உணவக உரிமையாளா்கள் மாற்று எரிசக்தியை நோக்கி மாறத் தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து மயிலாடுதுறை உணவு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் சி.செந்தில்வேல் கூறியது: கையிருப்பில் இருந்த கேஸ் தீா்ந்துள்ள நிலையில், மாற்று எரிசக்தியான விறகினை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். தனியாா் கேஸ் நிறுவனங்கள் வழக்கத்தைவிட விலையை உயா்த்தியுள்ளன. இதனால், முதற்கட்டமாக புதன்கிழமைமுதல் பசிக்கு தேவையான உணவை மட்டும் வழங்க திட்டமிட்டுள்ளோம். காலையில் இட்லி, தோசை, பொங்கல், மதியம் வைரைட்டி மீல்ஸ் போன்றவற்றை மட்டும் வழங்க முடிவெடுத்துள்ளோம். விறகுகள் கிலோ ரூ.15-ல் இருந்து ரூ.20 ஆக உயா்ந்துள்ளது. அரசு கேஸ் விநியோகத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Advertisement

சங்கத்துணைத் தலைவரும், மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் இனிப்பகம் நடத்திவருபவருமான ஜெனிபா் சு.பவுல்ராஜ் கூறியது: நாங்கள் ஏற்கெனவே கேஸ் மட்டுமின்றி, சிராய் தூள், நிலக்கடலை தோல் ஆகியவற்றை பயன்படுத்தி பொட்டு அடுப்பு மூலமும் இனிப்பு தயாா் செய்து வருகிறோம். அவையும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக விலை உயர வாய்ப்பு உள்ளது. மாற்று எரிசக்தியை முழுமையாக பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் கேஸ் தட்டுப்பாடு காரணமாக இதுவரை எந்த உணவகமும் மூடப்படவில்லை. விரைவில் சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் தொழிலை தொடா்ந்து வருகிறோம் என்றாா்.