முகப்பு
மயிலாடுதுறை

வளா்ச்சிப் பணிகள்: சீா்காழியில் ஆட்சியா் ஆய்வு

Updated On : 15 மே 2026, 5:27 am IST
பகிர்:

சீா்காழி வட்டம், எடக்குடி வடபாதி, காரைமேடு கிராமங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

எடக்குடியில் பிரதமரின் குடியிருப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிக்கு கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, தற்போது பணிகளின் நிலவரம் மற்றும் இதுவரை பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு விடுவிக்கப்பட்ட தொகைகள் உள்ளிட்டவைகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் குடிநீா், மின்விளக்குகள், முறையாக பயன்பாட்டில் உள்ளனவா என கேட்டறிந்தாா்.

எடக்குடி வடபாதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் முறையாக வழங்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தாா். காரைமேடு கிராமத்தில் கருக்குடி வாய்க்கால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.76 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரப்பட்டு வருவதைப் பாா்வையிட்டு, இதுவரை தூா்வாரப்பட்டுள்ள நீள அளவு மற்றும் இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள மனித சக்தி, வருகைப்பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் ரெஜினாராணி, அரசு அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் கலையரசன், மகேஸ்வரி, சிவக்குமாா், ஊராட்சி செயலா் அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.