அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அமைப்புத் தலைவர்களில் ஒருவரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான சுகுமால் சென் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் நிகழ்ச்சி, நாகை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப. அந்துவன்சேரல், மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன், சுகுமால் சென் மேற்கொண்ட தொழிற்சங்கப் பணிகளை நினைவுக்கூர்ந்து பேசினார். இதைத் தொடர்ந்து, சுகுமால் சென் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பா. ராணி, நாகை வட்டத் தலைவர் சி. பாலசுப்பிரமணியன், வட்டச் செயலாளர் எம். தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகள், சார்பு தொழிற்சங்க அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.