சீர்காழியில் சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நாள் தொடக்க விழா, உறுதிமொழி ஏற்பு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி அரசு மருத்துவமனை, சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பாஸ்கரன், ரோட்டரி மருத்துவ பணிகள் இயக்குநர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தேவலதா, சித்தா பிரிவு உதவி மருத்துவர் ஷாகுல் ஹமீது, மருத்துவ ஆலோசகர் சீதா, பள்ளி உதவி தலைமை ஆசிரியை கீதா ஆகியோர் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினர்.
தொடர்ந்து, திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் செந்தில்நாதன் உறுதிமொழி வாசிக்க, பள்ளி மாணவியர் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர், மாணவியர் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழாசிரியை தீபா வரவேற்றார். ரோட்டரி செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.