அமெரிக்காவில் உள்ள உலக திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பிராந்தியங்கரை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெ. இராமசாமிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆயக்காரன்புலம் -2 ஆம் சேத்தி பகுதியைச் சேர்ந்தவரான பிராந்தியங்கரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெ. இராமசாமி, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் படித்தவர். அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இவரின் 30 ஆண்டுகால ஆசிரியர் பணியை கௌரவித்து 2013 -இல் மாநில நல்லாசிரியர் விருதும், 2017-இல் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டது. இவரின் பல்வேறு நிலையிலான கல்வி, இலக்கிய சேவைகளைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள உலக திறந்த நிலைப் பல்கலைக்கழகம் அண்மையில் முனைவர் பட்டம் வழங்கியது. இதையொட்டி, வேதாரண்யம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இராமமூர்த்தி, ராஜமாணிக்கம், ஊராட்சி முன்னாள் தலைவர் கஸ்தூரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமையாசிரியர் தெ. இராமசாமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.