குழந்தைகளின் படைப்புகளுக்கு பெற்றோர் மதிப்பளிக்க வேண்டும்: கவிஞர் நந்தலாலா
குழந்தைகள் வரையும் ஓவியம் உள்ளிட்ட அனைத்து படைப்புகளையும் பெற்றோர் மதிப்பளித்து ஊக்கப்படுத்தும்போதுதான் அவர்களுக்குள் படைப்பாற்றல் வளமடையும் என்றார் கவிஞர் நந்தலாலா.
குழந்தைகள் வரையும் ஓவியம் உள்ளிட்ட அனைத்து படைப்புகளையும் பெற்றோர் மதிப்பளித்து ஊக்கப்படுத்தும்போதுதான் அவர்களுக்குள் படைப்பாற்றல் வளமடையும் என்றார் கவிஞர் நந்தலாலா.
வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலம் பகுதியில் பி.வி.தேவர் கல்வி அறக்கட்டளை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகரம் மெட்ரிக் பள்ளி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய பள்ளியை வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். விழாவுக்கு பள்ளித் தலைவரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை தாஜ்மஹால் நிறுவனத் தலைவர் எம்.என்.ஏ.எம். சபியுல்லா, மெட்ரிக் பள்ளிகளுக்கான ஆய்வாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கவிஞர் நந்தலாலா பேசியது: குழந்தைகளிடம் பெற்றோர் அதிகம் பேசவேண்டும், அது உறவுகளை பலப்படுத்தும். நிறைய கதைகளை சொல்வதால் குழந்தைகளின் கற்பனை வளமும், கேட்கும் திறனும் அதிகரித்து கற்றல் எளிதாகும். துன்பமும், தோல்வியும் வாழ்வில் வரும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டியது அவசியம். எந்த ஆசிரியர் குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறாரோ அவரால் மட்டுமே நல்ல கல்வியை கொடுக்கமுடியும் என்றார் கவிஞர் நந்தலாலா.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மா. மீனாட்சிசுந்தரம், என்.வி. காமராஜ், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் குழந்தைவேல், பள்ளித் தாளாளர் பி.வி.ஆர். விவேக், முதன்மை நிர்வாகி எஸ். வசிம் ஏஜாஸ், செம்போடை ஆர்.வி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆர். வரதராஜன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர்கள் ஜி.கே. கனகராஜ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.