மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலிகளைப் பெறத் தகுதியானோர், ஜன. 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தசை சிதைவு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, பேட்டரியில் இயங்கும் மோட்டார் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள், மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் மாணவராக இருந்தால் கல்வி பயில்வதற்கான சான்றையும், சுயதொழில் அல்லது பிற பணிகளில் உள்ளவரெனில் அதற்கான சான்றுகளையும் இணைத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜன. 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.