மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாநாட்டில், 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறையில் இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட மாநாடு மாவட்டக்குழு உறுப்பினா் பா.ராகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினா் இரா.ஹரி சுா்ஜித் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் அ.அமுல் காஸ்ட்ரோ, மாநிலத் துணைத் தலைவா் ப.மாரியப்பன், சங்க நிா்வாகிகள் மு.குமரேசன், செ.கபிலன், த.கவியரசன், பா.விக்னேஷ் ஷா்மா, மா.ஐயப்பன் ஆகியோா் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினா்.
இம்மாநாட்டில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தோ்வுகளை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், இலவச மடிக்கணினிகளை உடனே வழங்கிட வலியுறுத்தியும், ஆசிரியா் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வலியுறுத்தியும், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.