கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
கொள்ளிடம் ஒன்றியம், தாண்டவன்குளம் ஊராட்சிகளில் குளம் வெட்டும் பணிகளை மத்திய நீர்நிலை ஆதாரத் துறை மற்றும் நீர் மேலாண்மைத் துறை இணை இயக்குநர்கள் பிரேம் ஆனந்த், தாகூர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பழைய பாளையம் கிராமத்தில் ஊராட்சி சார்பில் பழத்தோட்டம் அமைக்கப்பட்ட இடத்தில் நீர் மேலாண்மை குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர், இயற்கை முறையில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் பாசனநீர் பயன்பாடு குறித்தும் கேட்டறிந்தனர். இந்த ஆய்வில், கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் சரவணன், உதவி பொறியாளர் பலராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன், பணி மேற்பார்வையாளர் வேல்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.