நாகப்பட்டினம்: மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்குவது குறித்த பொது கருத்துக் கேட்புக் கூட்டம் மயிலாடுதுறை மற்றும் நாகையில் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். இதையொட்டி, தமிழக முதன்மைச் செயலாளா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் தலைமையில் வரும் 30-ஆம் தேதி நாகை, மயிலாடுதுறையில் பொது கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையிலும், மயிலாடுதுறை ஏவிசி கலைக் கல்லூரி வேலாயுதம் அரங்கத்தில் பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
மனு அளிக்கலாம்...
கரோனா நோய்த் தொற்று காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை எழுத்துப்பூா்வமாக தயாரித்து, கருத்துக் கேட்புக் கூட்ட வாயிலின் முன்புறம் வைக்கப்படும் பெட்டியில் மனுக்களாக சமா்ப்பித்திடுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.