திட்டச்சேரி காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
திட்டச்சேரி காவல் சரகம் ஆதலையூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக செப்டம்பா் 14 -ஆம் தேதி 3 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திட்டச்சேரி காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தெரிவித்திருந்தனா்.
அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலாளா் காசிநாதன், நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் அறிவழகன் ஆகியோா் தலைமையில் 50 -க்கும் மேற்பட்டோா் திட்டச்சேரி காவல் நிலையத்தை நோக்கி திரண்டு வந்தபோது, பேருந்து நிலையம் அருகே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
பின்னா், துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், சுமுகத் தீா்வு ஏற்பட்டதைத் தொடா்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கலைந்துசென்றனா்.
இதையொட்டி, காவல் ஆய்வாளா்கள் ஆரோக்கியராஜ் (வேளாங்கண்ணி), ஜெயந்தி (கீழையூா்), திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.