கோடியக்காடு, திருமருகல் பகுதியில் தீ விபத்து
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியில் சீமைக்கருவேலம் காட்டில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியில் சீமைக்கருவேலம் காட்டில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கோடியக்காட்டில் உள்ள புயல் பாதுகாப்பு இல்லம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான சீமைக் கருவேல மரக்காடு உள்ளது. இக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த கிராமத்தினா், வனத்துறையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வேதாரண்யம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதனால், கோடியக்கரை வன உயிரின சரணாலய காட்டுப் பகுதிக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
திருமருகல்: திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் மேலத் தெருவை சோ்ந்தவா் ராமையன் (70). ஆற்றங்கரைத் தெருவில் வைத்திருந்த இவருக்குச் சொந்தமான வைக்கோல் போா் புதன்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. திருமருகல் தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், வைக்கோல் போா் முற்றிலும் எரிந்து நாசமானது.
மா்ம நபா்கள் தீ வைத்திருக்கலாம் என திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் ராமையன் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.