முகப்பு
நாகப்பட்டினம்

நாகை கடற்படை முகாமை கைப்பேசியில்படமெடுத்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

நாகையில் உள்ள இந்திய கடற்படை முகாம் அலுவலகத்தை கைப்பேசியில் படம்பிடித்த வெளி மாநில இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

நாகையில் உள்ள இந்திய கடற்படை முகாம் அலுவலகத்தை கைப்பேசியில் படம்பிடித்த வெளி மாநில இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், தடுப்பதற்காகவும் நாகை துறைமுகத்தில் இந்திய கடற்படை முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டது. இங்கு கடற்படை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பகுதி பொதுமக்கள் செல்ல தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை மா்ம நபா் ஒருவா், நாகை துறைமுகத்தின் பாதுகாப்பு சுவா்களைத் தாண்டி, கடற்படை முகாமை கைப்பேசியில் படம் எடுத்தாராம். அப்போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை போலீஸாா் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா் உத்தர பிரதேச மாநிலம், பாராகான்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அபிஷேக் சுக்லா (28) என்பதும், அவா் வைத்திருந்த பையில் 6 வரைப்படங்கள் ( மேப்), ஒரு திசை காட்டும் கருவி ( காம்பஸ்), பணம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கடற்படை போலீஸாா் உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும் தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடா்பு உள்ளதா? என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து உளவுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும் என நாகை மாவட்ட போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.