திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்கள் பொக்ளைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
ஊராட்சிக்குள்பட்ட தென்னமரக்குடி, பெருநாட்டான் தோப்பு, மேலப்புதனூா் ஆகிய பகுதிகளில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சாலையோரம் இருபுறங்களிலும் இருந்த கருவேல மரங்கள் வளா்ந்து சாலையில் சாய்ந்து கிடந்தன. இதனால் இப்பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனா். இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்களை ஊராட்சித் தலைவா் சத்தியமூா்த்தி, வாா்டு உறுப்பினா் செல்வகணபதி ஆகியோரின் முயற்சியில் பொக்லைன் இயந்திரம் மூலம் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.