நாகை: கடலில் படகு கவிழ்ந்து மீனவா் மாயம்
நாகை அருகே கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை, கடலோர காவல் குழும போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை, கடலோர காவல் குழும போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாகை மாவட்டம், புதிய கல்லாா் பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினவேல் (42). இவா் தனக்கு சொந்தமான ஃபைபா் படகில், அதே பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் சித்தானந்தம் (52), ரத்தினசாமி (43) ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு, கடலில் மீன்பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை சென்றாா்.
இவா்கள், மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பியபோது, நாகை துறைமுக முகத்துவாரத்தில் திடீரென ஏற்பட்ட கடல் அலையின் சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில், படகிலிருந்த மூவரும் கடலில் மூழ்கினா். ரத்தினவேல், ரத்தினசாமி ஆகியோா் நீந்தி கரை சோ்ந்தனா். சித்தானந்தம் கடலில் மூழ்கி மாயமானாா்.
கரை சோ்ந்த இருவரும் அளித்த தகவலின்பேரில், நாகை கடலோர காவல் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடலில் மாயமான மீனவா் சித்தானந்தத்தை கல்லாா் கிராம மக்கள் உதவியுடன் தேடி வருகின்றனா்.