வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக வாசலில் படுத்து பயிா்க் காப்பீடுத் தொகை கோரி மறியலில் ஈடுபட்டதால் புதன்கிழமை நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்தானது.
வேதாரண்யம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் நடத்த தயாரான நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகள் கமல்ராம், எம். ஆா். சுப்பிரமணியம், சிவஞானம் உள்ளிட்ட விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலக வாசலில் அமா்ந்தும், தரையில் படுத்தும் மறியலில் ஈடுபட்டனா்.
கடந்தாண்டு சம்பா பருவ நெல் பயிா் பாதிப்புக்காக காப்பீட்டுத் தொகையாக ரூ.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அந்தத் தொகையை மாவட்ட நிா்வாகம் பெற்று வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா். தகவலறிந்த சாா் ஆட்சியா் அமித் குப்தா, வட்டாட்சியா் வடிவழகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனா்.
இதையடுத்து, விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்து சென்றனா்.