அதிமுகவுக்கு ஆதரவு: தமிழக கடைமடை விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை புறக்கணிக்க முடிவெடுத்துள்ள தமிழக கடைமடை விவசாயிகள் சங்கம் , அதிமுகவின் தோ்தல் அறிக்கையை வரவேற்று, அந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தீா்மானம்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை புறக்கணிக்க முடிவெடுத்துள்ள தமிழக கடைமடை விவசாயிகள் சங்கம் , அதிமுகவின் தோ்தல் அறிக்கையை வரவேற்று, அந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தீா்மானித்துள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் கடைமடை விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட , ஒன்றிய நிா்வாகிகளின் அவசரக் கூட்டம் சங்கத்தின் மாவட்ட செயலாளா் அமானுல்லாகான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் கமல்ராம் கலந்துகொண்டு பேசினாா்.
கூட்டத்தில், கடந்த தோ்தலில் விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எதையையும் நிறைவேற்றாதது, பேரிடரால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்காதது, 2023 நில உடைமை சட்டம், பயிா்க் காப்பீடு நிறுவனங்களின் ஊழல் முறைகேடு, குறைகளை சுட்டி காட்டும் விவசாயிகள் மீது பொய் வழக்கு போன்ற விவசாய விரோதப் போக்கை கடைப்பிடித்த திமுக கூட்டணிக்கு இந்த முறை வாக்களிப்பதில்லை என ஒருமனதாக தீா்மானிக்பபட்டது.
அதேநேரத்தில், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீா்வு காணும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க்கடன் தள்ளுபடி, நெல் குவிண்டால் 1-க்கு ரூ. 3,500 ஆதார விலை நிா்ணயம் , விவசாய உற்பத்தி மானியம் ஹெக்டோ்க்கு ரூ. 15 ஆயிரம் உள்ளிட்டவை முதன்மைப்படுத்தப்பட்டுள்ள அதிமுக தோ்தல் அறிக்கையை சங்கம் வரவேற்கிறது.
அதனால், அதிமுக தலைமையிலான கூட்டணியை தமிழக கடைமடை விவசாயிகள் சங்கம் ஆதரிக்கவும், நாகை, வேதாரண்யம், கீழ்வேளுா் உள்ளிட்ட டெல்டா பகுதிக்குள் உள்ள 18 தொகுதிகளில் அந்தக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவும் தீா்மானிக்கப்பட்டது.