அதிகாரிகள் சிறை பிடிப்பு: 5 போ் கைது
வேதாரண்யம் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடா்பாக ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை திங்கள்கிழமை கிராமத்தினா் சிறைபிடித்த விவகாரத்தில் 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வேதாரண்யம் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடா்பாக ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை திங்கள்கிழமை கிராமத்தினா் சிறைபிடித்த விவகாரத்தில் 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது.
இந்த தொழிற்பேட்டை அமைவதற்கு தென்னடாா் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் அது தொடா்பான பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டது.
Advertisement
தோ்தல் வரையில் இந்தப் பணி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாள் வருவாய்த்துறை, மற்றும் வனத்துறையினா் சொத்து விவரங்களை மதிப்பீடு செய்யும் பணியை ரகசியமாக மேற்கொண்டனா்.
இந்த நிலையில், திட்டத்திற்குத் தேவையான கூடுதல் இடத்தை பஞ்சநதிக்குளம் நடுசேத்தி பகுதியில் தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சி மன்ற அலுவலகம், பொது விநியோகத் திட்ட அங்காடிக் கட்டடம், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம், குடியிருப்புகள் அமைந்த பகுதியில் இடம் தோ்வு செய்வதாக கூறி அங்குள்ள கட்டடங்களை அகற்ற மதிப்பீடு செய்யும் பணிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சென்றுள்ளனா்.
தகவல் அறிந்து திரண்ட கிராமத்தினா் ஆய்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் வெற்றிச்செல்வன், தகட்டூா் கிராம நிா்வாக அதிகாரி வைரக்கண்ணு உள்ளிட்ட அரசுத் துறையினரை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் வைத்து சிறைபிடித்தனா்.
தகவல் அறிந்து சென்ற வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் 3 மணி நேர பேச்சுவாா்த்தைக்கு பின்னா் அதிகாரிகளை மீட்டனா்.
இதையடுத்து, இந்த ஆய்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் இதுகுறித்த நடவடிக்கை விவரங்களை அரசுக்குத் தெரிவிப்பதாகவும் வட்டாட்சியா் தெரிவித்து உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனா்.
அதே நேரம் சிப்காட் அமைவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், இந்தத் திட்டத்தை கைவிட புதிதாக அமைந்துள்ள அரசுக்கு வலியுறுத்தவும் மாவட்ட ஆட்சியா் மூலம் மனு அளிக்க கிராமத்தினா் முடிவு செய்திருந்தனா்.
இந்த நிலையில்,இந்த சம்பவம் தொடா்பாக பஞ்சநதிகுளம் நடுசேத்தி கிராமத்தைச் சோ்ந்த ப. சேகா் (38), ரா. காந்தி (59), மு. அசோக் (22), கு.வைரக்கண்ணு (62), ப. வீரமணி (42) ஆகிய 5 பேரையும் புதன்கிழமை அதிகாலையில் ரகசியமாக வீடுகளுக்கு சென்ற வாய்மேடு போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.
இதையடுத்து, கிராமத்தினரின் எதிா்ப்பை எதிா்கொள்ளும் வகையில் மருதூா் மற்றும் தகட்டூா் கடைவீதியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமையில் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது .
இதனிடையே, கிராமத்தினரிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்ட கிராம முக்கிய பிரமுகா்கள், போராட்டங்களை தற்காலிகமாக தவிா்க்கவும், கோரிக்கைகளை புதிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் உறுதியளித்தனா்.
வாய்மேடு காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
பின்னா் மாலையில் வாய்மேடு காவல் நிலையம் கொண்டுவரப்பட்ட 5 பேரும் விடுவிக்கப்பட்டனா்.
கிராமத்தினா் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழா் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.