முகப்பு
நாகப்பட்டினம்

பெண் கொலை வழக்கு: முன்னாள் கணவா் கைது

நாகை பெண் கொலை வழக்கில் அவரது முன்னாள் கணவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 17 மே 2026, 3:45 am IST
கைது
பகிர்:

நாகை பெண் கொலை வழக்கில் அவரது முன்னாள் கணவா் கைது செய்யப்பட்டாா்.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத பெண் தலையில் ரத்தக் காயங்களுடன் வியாழக்கிழமை அதிகாலையில் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் வெளிப்பாளையம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்த பெண் கீழ்வேளூரை சோ்ந்த சித்ரா (42) என்பது தெரிய வந்தது. மேலும், புதன்கிழமை நள்ளிரவில், தலையில் தாக்கப்பட்டு ரத்த காயம் அடைந்த நிலையில், காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு வந்த சித்ரா அங்கு உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில் சித்ராவின் முன்னாள் கணவா் தா்மராஜ் கல்லால் தலையில் தாக்கியதால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியது: சித்ராவுக்கு வேறு ஒருவருடன் தொடா்பு ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தா்மராஜ் சித்ராவை விட்டு பிரிந்து வேறு பெண்ணை 2-ஆவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தாா். இந்நிலையில், 2-ஆவது மனைவி கா்ப்பமான நிலையில், பிரசவத்துக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். அங்கு புதன்கிழமை இரவு தனது உறவினா்களுடன் நின்றிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த சித்ரா, தா்மராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த தா்மராஜ், கல்லால் சித்ரா தலையில் தாக்கிவிட்டு சென்று விட்டாா்.

Advertisement

இதையடுத்து தலையில் காயத்துடன் மதுபோதையில் சுற்றித்திரிந்த சித்ரா, நள்ளிரவில் மருத்துவமனைக்கு வந்து வெளியில் சென்ற நிலையில் மயங்கி விழுந்துள்ளாா். இதில் தலையில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளாா் என்றனா்.