முகப்பு
திருவாரூர்

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நிதிப் பற்றாக்குறையால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இறகுப் பந்து

Updated On : 1 டிசம்பர், 2016 at 11:40 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:18 AM

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நிதிப் பற்றாக்குறையால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கம் கட்டுமானப்பணி முழுமைப்பெற்று 3 மாதங்கள் கடந்தும் இன்னும் திறப்பு விழா காணாததால் விளையாட்டு வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக தமிழக அரசின் சார்பில், மன்னார்குடியில் இறகுப் பந்து விளையாட்டு அரங்கம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக 2005-ஆம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

விளையாட்டு அரங்கம் அமைக்க, மன்னார்குடி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளி வளாகத்தில் சுமார் 2,000 சதுர அடி நிலம் தேர்வு செய்யப்பட்டது. கல்வி வரி நிதியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, இறகுப் பந்து அரங்கத்தின் கட்டடப் பணிகள் தொடங்கின. விளையாட்டு அரங்கத்தின் உள்புறம், தரைத்தளம், இருக்கைகள், மர வேலைப் பணிகளுக்கு என ரூ.5 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. கட்டுமானப் பணியும் தடையின்றி முழு வீச்சில் நடைபெற்றன.

Advertisement

இந்நிலையில், விளையாட்டு அரங்கம் அமைக்க ஆர்வம் செலுத்திய அப்போதைய நகராட்சி ஆணையர் பணி இடமாறுதலில் சென்றதால், நகராட்சிக்குப் புதிய ஆணையர்களாக வந்தவர்களும் உடனுக்குடன் பணியிட மாற்றம் பெற்றுச் சென்றனர். இதனால், கடந்த 6 ஆண்டுகளாக ஆணையர் பணியிடம் காலியாகவே இருந்தது.

விளையாட்டு அரங்க கட்டுமானப் பணியில் நகராட்சி நிர்வாகம் போதிய கவனம் செலுத்தாததால் பணிகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டன.

இதனால் கடந்த 6 ஆண்டுகளாக விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிக்காக எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. அவ்வப்போது சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வந்து விளையாட்டு அரங்கத்தைப் பார்வையிட்டு, விரைவில் தேவையான நிதி பெறப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று சொல்வது மட்டும் தொடர் நிகழ்வாக இருந்து வந்தது.

விளையாட்டு அரங்க கட்டடப் பணி பாதியில் நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகள் கடந்ததால், கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுவதுடன், அப்பகுதியில் செடிகள் முளைத்து புதர்களாக காட்சியளித்தன.

இந்நிலையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி ரூ.25 லட்சம் நிதியில் மீண்டும் தொடங்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு 3 மாதம் கடந்து விட்டன. இருப்பினும் இன்னும் திறப்பு விழா நடைபெறாமல் பூட்டிவைக்கப்பட்டிருப்பதால் விளையாட்டு வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.