திருவாரூர் மாவட்டத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கட்டுரை மற்றும் குறும்பட போட்டி நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் மூலம் சுகாதாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தூய்மை பாரத இயக்கம் திட்டம் சார்பில் கட்டுரை மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மாவட்டத்திலுள்ள 430 கிராம ஊராட்சிகளில் அனைத்துப் பொதுமக்களும் பங்கேற்கும் போட்டியில் "தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், 2 முதல் 3 நிமிடம் வரை திரையிடப்படும் வகையில் "தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு எனது பங்களிப்பு' என்ற தலைப்பில் குறும்பட போட்டியும் நடத்தப்படுகிறது.
போட்டியில் 18 வயதுக்குள்பட்டவர்கள், 18 முதல் 60 வயதுக்குள்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சிறப்பு வகை பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள்) பிரிவில் இருபாலரும் பங்கேற்கலாம். ஒவ்வொரு ஊராட்சியிலிருந்தும் தலா 1 கட்டுரை மற்றும் குறும்படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டித்தொடர்பாக கிராம ஊராட்சிச் செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகலாம்.
வெற்றி பெற்றவர்களுக்கு அக்.2-ஆம் தேதி மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுகிறவர்களுக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்குவார். போட்டி கிராம அளவில் செப்.4-ஆம் தேதி காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதேபோல் செப்.6-ஆம் தேதி வட்டார அளவிலும், 8-ஆம் தேதி மாவட்ட அளவிலும், மாநில அளவில் செப்.10-ஆம் தேதியும் போட்டிகள் நடத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.