மன்னார்குடியில் திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினின் 65-ஆவது பிறந்த நாளையொட்டி, ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி வ.உ.சி. சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 35 பேரிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மாணவரணி சார்பில் செங்குந்தர் தெரு வாணி விலாஸ் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு தேர்வுக் கருவிகள், டிபன்கேரியர், நோட்டு, எழுதுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பொறியாளர் அணி சார்பில் உப்புக்காரத் தெரு, புனித சூசையப்பர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில், மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஹரித்ராநதி தெப்பக்குளம் கீழ்கரையில் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
நகர திமுக சார்பில் ருக்மணிபாளையம் அண்ணா சிலையிலிருந்து கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து நகரின் முக்கிய இடங்களில் திமுக கட்சிக் கொடியை ஏற்றினர்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் திமுக மாவட்டச் செயலர் கே. கலைவாணன் தலைமை வகித்தார். இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பி. ராஜமாணிக்கம், மாநில மாணவரணி துணைச் செயலர் த. சோழராஜன், நகரச் செயலர் வீரா. கணேசன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் சுந்தர், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எஸ். சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.