ஒளிரும் பட்டைகளை மறைத்து பனை மரங்களில் விளம்பரப் பதாகைகள்: உடனடியாக அகற்ற வலியுறுத்தல்
திருவாரூரில் சாலையோர பனை மரங்களில் உள்ள ஒளிரும் பட்டைகளை மறைத்து ஆணி அடித்து தொங்கவிடப்பட்டுள்ள
திருவாரூரில் சாலையோர பனை மரங்களில் உள்ள ஒளிரும் பட்டைகளை மறைத்து ஆணி அடித்து தொங்கவிடப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் பகுதியிலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஓரங்களில் காணப்படும் மரங்களில் விளம்பரப் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, விளமல் பகுதியில் இருபுறமும் காணப்படும் பனை மரங்களில் இந்த பதாகைகள் காணப்படுகின்றன. இந்த பனை மரங்களில் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் இருக்க ஒளிரும் பட்டைகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆணி அடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஒளிரும் பட்டைகளை மறைந்து பல்வேறு இடங்களில் தற்போது விளம்பரப் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. பனை மரங்களை காக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் பனை விதைகளை சேகரித்து ஆறு, வாய்க்கால்களின் கரைகளில் விதைத்து வருகின்றன.
பனை மரங்களின் முக்கியத்துவம் கருதி, அவற்றை உருவாக்குவதற்கென பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பனை மரங்களின் மீது ஆணி அடித்து விளம்பரப் பதாகைகள் தொங்கவிட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பனை மரங்கள் உள்ளிட்ட அனைத்து மரங்கள் மீதும் அடிக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.