நீடாமங்கலம் அருகே மயானத்துக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், ஆற்று நீரில் இறங்கி, இறந்த பெண்ணின் உடலை சுமந்து சென்று வெள்ளிக்கிழமை மாலை இறுதிச் சடங்குகள் செய்தனர்.
நீடாமங்கலம் அருகேயுள்ள மேலப்பூவனூர், வெள்ளாம் பூவனூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை தகனம் செய்ய, கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மாற்றுப்பாதை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் கோயில் இருப்பதால், இறந்தவர்களின் உடலை அந்த பாதையின் வழியாக கொண்டு செல்லாமல், கொண்டியாறு வழியாகத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், மேலப்பூவனூரைச் சேர்ந்த அமிர்தவள்ளி (65) என்பவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரது உடலை பாடையில் சுமந்தபடி கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு சென்று, இறுதிச்சடங்குகள் செய்தனர்.
பாலம் கட்ட வேண்டும்: இத்தகைய இடர்பாடுகளை தவிர்க்க கொண்டியாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலம் கட்டப்பட்டால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு மட்டுமன்றி, அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்லவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏற்கெனவே, பலமுறை கோரிக்கை விடுத்தும் இப்பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.