பாஜக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்துக்கு ஆதரவு கோரி, மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு என்பதை பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவிக்க தயாரா?. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால், இருக்கும் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டதுடன், மத்திய அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவும் இல்லை. இதனால், பாஜக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் முடிவு எடுக்கும் முன்பே, மக்கள் முடிவு எடுத்துவிட்டனர். எனவே, மத்தியில் பாஜக ஆட்சிக்கும், தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கும் முடிவு கட்டப்படுவது உறுதி என்றார் கி.வீரமணி.
கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, ஒன்றியச் செயலர் க. தனராஜ், மதிமுக மாவட்டச் செயலர் பி.பாலச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என். மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய நிர்வாக் குழு உறுப்பினர் டி.கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தொழிலாளரணி செயலர் ரா. ரமணி, திக ஒன்றியத் தலைவர் மு. தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.