மன்னார்குடி அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணப் பொருள்கள் அனைவருக்கும் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
மன்னார்குடி அருகேயுள்ள ரொக்ககுத்தகை, ராஜபையன்சாவடி, வடகாரவயல், தென்காரவயல் ஆகிய கிராமங்களில், அண்மையில் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அரசுத் துறையினர் கணக்கெடுப்பு செய்து, கடந்த சில நாள்களாக அவர்களுக்கு தமிழக அரசின் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கணக்கெடுப்பு செய்து பயனாளிகள் பட்டியல் தயார் செய்து நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் கட்சி அரசியல் பார்க்கப்பட்டு பாரபட்சமாக வழங்கப்பட்டு வருவதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணப் பொருள்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி, நான்கு கிராமங்களைச் சேர்ந்த நிவாரணம் கிடைக்கப் பெறாதவர்கள் ராஜப்பையன்சாவடி குபேந்திரன் என்பவரது தலைமையில், செவ்வாய்க்கிழமை மன்னார்குடி, கும்பகோணம் பிரதான சாலை ரொக்கக்குத்தகை பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து, நிகழ்விடத்துக்கு வந்த, மன்னார்குடி காவல் ஆய்வாளர் ஏ. கண்ணன், நீடாமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் எல். சந்திரசேகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறுதிஅளித்ததன் பேரில், மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், அவ்வழித்தடத்தில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.