திருத்துறைப்பூண்டி அருகே கிழக்குகடற்கரை சாலையில் ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தேசிங்குராஜபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (35) ஓட்டினார். பேருந்தில் 39 பயணிகள்பயணம் செய்தனர்.
இந்நிலையில், பேருந்து முத்துப்பேட்டை அருகே பாண்டிக்கோட்டகம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது அப்துல்காதர் (72) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த 29 பேரில் 13 பேர் திருத்துறைப்பூண்டிஅரசு மருத்துவமனையிலும், 16 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.