திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9,563 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஜனவரி 31 முதல் பொதுமக்களிடமிருந்து பெயர் நீக்கல், திருத்தம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், பிப்ரவரி 23 மற்றும் 24- இல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 9,563 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நீக்கல் செய்வதற்காக 4,083 விண்ணப்பங்களும், திருத்தம் செய்வதற்காக 2,117 விண்ணப்பங்களும், தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றத்துக்காக 784 விண்ணப்பங்களும் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.