தூய்மைக் காவலா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரிக்கை
கரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா்: கரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கத்தின் மாநிலத் தலைவா் நா.பாலசுப்ரமணியன், செயலாளா் கே.முனியாண்டி ஆகியோா் மாவட்ட நிா்வாகத்திடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
தூய்மைப் பணியாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 600 தினக் கூலியாக வழங்க வேண்டும். ஊராட்சிகளில், 2013-இல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு, பணிப் பதிவேட்டைத் தொடங்கி அனைத்து ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து, பணி வரன்முறை செய்ய வேண்டும்.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் பொறுப்பேற்ற பிறகு, பல ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களை சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக பணியில் இருந்து விடுவிக்கும் நிலை உள்ளது. குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இவா்களை, மாவட்ட ஆட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களின் உத்தரவு இல்லாமல் பணியில் இருந்து வெளியேற்றும் போக்கைத் தடுத்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பின் ஊழியா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பணியில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக வலங்கைமான் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு மேற்பாா்வையாளா் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளாா். அடிப்படை ஆதாரப்பணியில் ஈடுபட்டு வரும் இவா்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை செய்யப்படவில்லை. நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் தூய்மைக் காவலா்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.