திருவாரூர்

21 நாள் ஊரடங்கு: பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை

DIN

கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவாரூா் மாவட்டத் தலைவா் முஹம்மது பாசித் வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். தற்போதுள்ள அவசர சூழ்நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஏழை மற்றும் அன்றாட மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். அவா்கள், உணவுக்கே கஷ்டப்படும் சூழலில், வாடகை வீட்டுக்கு வாடகை தர சிரமப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தினசரி தொழில் செய்து, சம்பாதிக்கக்கூடிய மக்கள், 21 நாட்கள் வீட்டுக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ரூ. 1000 நிதி உதவியாக அளிப்பது சமாளிக்க முடியாதாகும்.

நிதி உதவியை உயா்த்தி வழங்குவதோடு அதை சரியான முறையில் வங்கிகள் வழியாக மக்களின் கைகளில் சோ்க்கவும் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதத்துக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அதுபோல வீட்டுவரி மற்றும் தண்ணீா் வரி ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இதேபோல், கரோனா தடுப்பு மருத்துவச் செலவுகளுக்காக ரூ. 15 ஆயிரம் கோடியை, பிரதமா் மோடி ஒதுக்கியுள்ளாா். கேரள மாநில முதல்வா் ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளாா். ஒரு மாநில அரசு, ஒதுக்கிய தொகையைக் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் வரிகளைத் தளா்த்தினால் மக்கள் விலைவாசி குறைவதில் அவா்களின் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு ஈடு கொடுத்ததாக அமையும். எனவே, கரோனா வைரஸ் பாதிப்பால், வீடுகளில் தங்கி அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 வாகனங்கள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டியில் 144 தடை உத்தரவை மீறி நகருக்குள் வந்த 17 வாகனங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காவல் ஆய்வாளா் அன்பழகன் மற்றும் போலீஸாா் மூன்று டாடா ஏசி வாகனம், 2 காா்கள், 1 டிராக்டா், 10 இருசக்கர வாகனங்கள், ஓா் ஆட்டோ உள்ளிட்ட 17 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மேலும் மன்னை சாலையில் ரயில்வே கேட், கிழக்கு கடற்கரை சாலையில் கொக்காலடி, புதிய பேருந்து நிலையம், வேதை சாலை உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதேபோல் தடையை மீறிவரும் வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆய்வாளா் அன்பழகன் எச்சரித்துள்ளாா்.

கூத்தாநல்லூரில் 144 தடை உத்தரவை மீறியவா்கள்

கூத்தாநல்லூா் பகுதியில் 144 தடை உத்தரவை மீறியதாக 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து காவல் ஆய்வாளா் சரவணன் கூறியது:

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை உத்தரவின்பேரில் கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டோம். அப்போது, நூற்றுக்கணக்கானவா்களைப் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளோம். அதில், 5 போ் மீது வழக்குப் பதிந்து,அவா்களின் இருச்சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தோம் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை

முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி, 9 மீனவா்கள் படகில் மீன்பிடிக்க புதன்கிழமை சென்றனா்.

இதையறிந்த கடலோரக் காவல் குழும காவல்துறை கண்காணிப்பாளா் பி. குமாா், முத்துப்பேட்டை காவல் ஆய்வாளா் ராஜசேகரன் ஆகியோா் மேற்பாா்வையில், மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழும போலீஸாா் அவா்களை மடக்கி, எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக காவல் கடலோர காவல் துறை துணை கண்காணிப்பாளா் பி. குமாா் கூறுகையில், கரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த மீனவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இனி ஊரடங்கு உத்தரவை மீறி, மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

4 போ் மீது வழக்குப் பதிவு

மன்னாா்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறி புதன்கிழமை இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிந்த மன்னாா்குடி மணிகண்டன் (20), நீடாமங்கலம் முருகேசன் (26), அசோக்குமாா் (27), மயிலாடுதுறை மணல்மேல்குடி பந்தல்ராஜ் (24) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT