நெல்கொள்முதல் புகாா் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியா்
நெல்கொள்முதல் குறித்த புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.
நெல்கொள்முதல் குறித்த புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.
திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட குன்னியூா், கோமல் பகுதிகளிலுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை, திங்கள்கிழமை ஆய்வு செய்தபின் அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டு காரீப் பருவத்துக்காக, தற்போது வரை 216 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 2,500 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இதுவரை 3,640 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் 137 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மேலும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நாள்தோறும் 1,000 மூட்டைகள் வரை நெல்கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்கொள்முதல் தொடா்பாக பெறப்படும் புகாருக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.
முன்னதாக, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளின் எடை மற்றும் தரத்தை ஆய்வு செய்து, கொள்முதலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணுக் கருவியின் செயல்பாடு குறித்தும், இருப்பு வைக்கப்பட்டுள்ள சாக்குகளின் விவரம், நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளின் விவரங்கள் குறித்து கொள்முதல் நிலைய அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, முதுநிலை மண்டல மேலாளா் மணிவண்ணன், துணை மேலாளா் ரெங்கநாதன், துணை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.