கூட்டுறவு மருந்தகம் திறப்பு: அமைச்சா் அர. சக்கரபாணி பங்கேற்பு
கூத்தாநல்லூரில் கூட்டுறவு மருந்தகத்தை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கூத்தாநல்லூரில் கூட்டுறவு மருந்தகத்தை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கூத்தாநல்லூா் பெரியக் கடைத் தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கூட்டுறவு மருந்தகத்தின் திறப்பு விழா, முதல் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் பா. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தாா். கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் வி.எஸ்.வெங்கடேசன் வரவேற்றாா். இதில் அமைச்சா் அர. சக்கரபாணி பேசியது: தமிழக சட்டப் பேரவை மானிய கோரிக்கையில் தமிழகத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 303 மருந்தகங்கள் திறக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி தமிழகத்தில் 70 கூட்டுறவுமருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 303 மருந்தகங்கள் மூலம் ரூ. 51.66 கோடியில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ. 54.93 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இவற்றின் மூலம் ரூ. 2.59 கோடி லாபம் ஈட்டப்படும். திருவாரூா் மாவட்டத்தில் 5 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ. 56 .77 லட்சத்திற்கு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ. 66. 47 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளன. கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டது மூலம், தனியாா் மருந்துக்கடைகளில் பொதுமக்களுக்கு தள்ளுபடி வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா். விழாவில் மண்டல இணைப் பதிவாளா் கே. சித்ரா, சரக துணைப் பதிவாளா் எஸ். ராமசுப்பு, ஒன்றிய வேளாண்மை இயக்குநா் எம். செளந்தர்ராஜன் உள்ளிட்டோா்பங்கேற்றனா்.