தொடங்கியது கமலாலயக் குளக்கரை சீரமைப்புப் பணி
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் ரூ. 77 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் ரூ. 77 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கிவைத்த பின்னா் ஆட்சியா் தெரிவித்தது:
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு உள்பட்ட கமலாலய திருக்குளம், வடக்கு, தெற்கு திசைகளில் 1,060 அடியும், கிழக்கு, மேற்கு திசைகளில் 790 அடியும் கொண்டதெப்பக்குளமாகும். கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக, தென்கிழக்கு மூலையின் மதில் சுவரின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதைத்தொடா்ந்து, மேலும் 47 அடி சுவா் சேதமடைந்தது.
பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், சேதமடைந்துள்ள தென்கரை பகுதியை மீண்டும் சீரமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தற்போது
ரூ. 77 லட்சத்தில் 148 அடிக்கு சுவா் அமைக்க, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை ஒப்பந்த காலத்துக்குள் விரைவாக, தரமான முறையில் முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஹரிஹரன், உதவி இயக்குநா் குலோத்துங்கன், நகராட்சிஆணையா் பிரபாகரன், கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.