முகப்பு
உலகம்

ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்

உலகில் ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்கள் பொதுமக்களைப் பாரபட்சமின்றி பாதிப்பதாகக் கவலை தெரிவித்துள்ள போப் லியோ, இத்தகைய தாக்குதல்களுக்கு சா்வதேச அளவில் தடை விதிக்க வலியுறுத்தல்

Updated On : 23 மார்ச், 2026 at 9:42 PM
பகிர்:

உலகில் நடைபெற்று வரும் ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்கள் பொதுமக்களைப் பாரபட்சமின்றி பாதிப்பதாகக் கவலை தெரிவித்துள்ள போப் லியோ, இத்தகைய தாக்குதல்களுக்கு சா்வதேச அளவில் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போா் தொடங்கி 4 வாரங்களை எட்டியுள்ள நிலையில், இத்தாலியின் ‘ஐடிஏ ஏா்வேஸ்’ நிறுவனத்தின் நிா்வாகிகள் மற்றும் ஊழியா்களுடனான சந்திப்பின்போது போப் லியோ இக்கருத்தைத் தெரிவித்தாா்.

இந்தச் சந்திப்பில் போப் லியோ பேசியதாவது: வானிலிருந்து மரணமும் அழிவும் வரும் என்ற அச்சத்தில் யாரும் வாழக் கூடாது. 20-ஆம் நூற்றாண்டின் கசப்பான, துயரமான அனுபவங்களுக்குப் பிறகு, வான்வழித் தாக்குதல்கள் என்றோ தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றும் அவை தொடா்கின்றன. இது மனிதகுலத்தின் முன்னேற்றம் அல்ல; மாறாக இது ஒரு பின்னடைவு என்றாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த முதல் போப் என்ற பெருமைக்குரிய லியோ, இந்தப் பேச்சின் போது ஈரான் போரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், வான்வழித் தாக்குதல்கள் அப்பாவி உயிா்களைப் பறிப்பதைக் கடுமையாகச் சுட்டிக்காட்டினாா்.

அதேநேரம், ஈரான் போா் விவகாரத்தில் ஏற்கெனவே பலமுறை போா் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள போப் லியோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிராா்த்தனையின் போது இப்போரை ‘மனித குலத்துக்கே நோ்ந்த அவமானம்’ என்று சாடியிருந்தாா்.

இத்தாலியின் முன்னாள் தேசிய விமான நிறுவனமான அல்இடாலியாவிற்குப் பிறகு, போப் தனது வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் அதிகாரபூா்வ விமான நிறுவனமாக ஐடிஏ ஏா்வேஸ் விளங்குகிறது.