டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
கத்தோலிக்க அவையின் தலைவரான போப் லியோ பேசியவை...
டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை என போப் லியோ பேசியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் பற்றி ரோமன் கத்தோலிக்க அவையின் தலைவரான போப் 14ஆம் லியோ கருத்து தெரிவித்திருந்தார். உலக நாடுகள் போரில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்ட அவர் போரை நிறுத்த வேண்டுகோள் விடுக்குமாறு பேசியிருந்தார்.
அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரைக் கடுமையாக விமர்சித்தார்.
Advertisement
இந்த நிலையில், போப் லியோ தனது முதல் ஆப்ரிக்கப் பயணமாக அல்ஜீரியா செல்கிறார். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் அந்த நாட்டிற்கு செல்லும் முதல் போப் இவரே.
விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசியஅவர், “நான் அரசியல்வாதி இல்லை. டிரம்ப்புடன் விவாதம் செய்ய எனக்கு விருப்பமில்லை. சிலர் செய்வது போல, நற்செய்தியின் நோக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த நான் நினைக்கவில்லை. நான் தொடர்ந்து போருக்கு எதிராக உறுதியாகப் பேசி வருகிறேன். பிரச்னைகளுக்குத் தீர்வு காண நாடுகளிடையே அமைதி, உரையாடல் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க முயல்கிறேன்.
டிரம்ப் நிர்வாகத்தைப் பற்றியோ அல்லது கிறித்தவ நற்செய்தியை உரக்கப் பேசுவதைப் பற்றியோ எனக்கு எந்த பயமும் இல்லை. அதைச் செய்வதற்கே நானும், திருச்சபையும் இங்கு இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, போப் பற்றி விமர்சித்த டிரம்ப், “நான் போப்-ன் பெரிய ஆதரவாளன் இல்லை. அவர் சிறப்பாகச் செயல்படுவதாக நான் கருதவில்லை. அவருக்கு குற்றச்செயல்கள் மீது விருப்பம் என்று நினைக்கிறேன். அணு ஆயுதம் வைத்திருப்பது சரி எனக் கூறும் போப் எங்களுக்கு வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் தனது புகைப்படத்தை இயேசுவைப் போன்று ஏஐ மூலம் சித்திரித்து டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.