தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்...
போப் லியோவை கடுமையாக விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசுவாக சித்திரிக்கும் சர்ச்சை புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கிறிஸ்துவ மதத் தலைவரான 14 ஆம் போப் லியோ தொடர்ந்து விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசுகையில், போப் லியோ குற்றச்செயல்கள் மீது விருப்பம் கொண்டவராக நான் நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தன்னை இயேசுவாக சித்திரிக்கும் செய்யறிவு புகைப்படத்தை ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், நோய்வாய்ப்பட்ட ஒருவரின் மீது இயேசுவை போல் உடை அணிந்திருக்கும் டிரம்ப் கை வைப்பதைப் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதில் அமெரிக்கக் கொடி, ராணுவ விமானங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, போப் லியோ குறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில்,
“போப் லியோ குற்ற விஷயத்தில் பலவீனமானவர், வெளியுறவுக் கொள்கையில் படுமோசமானவர். டிரம்ப் நிர்வாகத்தின் மீதிருக்கும் பயத்தைப் பற்றி பேசும் அவர், கரோனா காலத்தில் பத்து அல்லது இருபது அடி இடைவெளியில் நின்று வழிபாட்டு கூட்டங்களை நடத்தியதற்காக பாதிரியார்கள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது கத்தோலிக்கத் திருச்சபையும் மற்ற அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளும் அனுபவித்த பயத்தைப் பற்றி அவர் பேசவில்லை.
அவரை விட அவருடைய சகோதரர் லூயிஸை எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனென்றால் லூயிஸ் ‘மெகா அமெரிக்கா கிரேட் அமெரிக்கா’வின் ஆதரவாளர். அவருக்கு அனைத்து விஷயங்களும் புரிகிறது, ஆனால், லியோவுக்குப் புரியவில்லை.
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது சரி என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம். அமெரிக்காவுக்குள் பெருமளவு போதைப்பொருள்களை அனுப்பி, சிறையில் இருந்த கொலைகாரர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கொலையாளிகளை நம் நாட்டிற்குள் அனுப்பிக் கொண்டிருந்த வெனிசுவேலாவை தாக்கியது ஒரு தீவிரக் குற்றமாக என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம். மேலும், அமெரிக்க அதிபரை விமர்சிக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம்.
நான் எதற்காக மாபெரும் வெற்றியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, அதைதான் சரியாகச் செய்துகொண்டிருக்கிறேன். குற்றங்களின் எண்ணிக்கையை வரலாறு காணாத அளவுக்கு குறைத்து, வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்குச் சந்தையை உருவாக்கி வருகிறேன்.
போப் ஆவதற்கான எந்தப் பட்டியலிலும் அவர் இல்லை. அவர் அமெரிக்கர் என்பதாலும், டிரம்ப்பைக் கையாள்வதற்கு சிறந்த வழியாக இருக்கும் என திருச்சபை நினைத்ததாலும் மட்டுமே அவரை அந்தப் பதவியில் அமர்த்தியது. நான் வெள்ளை மாளிகையில் இல்லையென்றால், லியோ வாடிகனில் இருந்திருக்க மாட்டார். தீவிர இடதுசாரிகளுக்குச் சேவை செய்வதை நிறுத்தி, ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் ஒரு சிறந்த போப்பாக இருப்பதில் லியோ கவனம் செலுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
Trump releases image depicting himself as Jesus!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.