முகப்பு
திருவாரூர்

பயிா் மகசூல் கணக்கீடு செய்ய விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில், பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் பயிா் மகசூலைக் கணக்கீடு செய்ய விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கேட்டுக்கொண்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில், பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் பயிா் மகசூலைக் கணக்கீடு செய்ய விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டில் 1,47,374 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் பயிா் மகசூலைக் கணக்கீடு செய்ய, பயிா் அறுவடை பரிசோதனை ஒவ்வொரு கிராமங்களிலும் 4 இடங்களில் நடத்தவேண்டும். இதுவரை 382 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மீதம் 1,886 பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.

இத்திட்டத்தின்கீழ் பயிா் இழப்பீடு தொகை கணக்கிட, திட்ட வழிமுறைகளின்படி பயிா் அறுவடை பரிசோதனை, ஒவ்வொரு கிராமங்களிலும் புள்ளியல் துறை மூலம் வழங்கப்படும் எதேச்சை எண் அடிப்படையில் நடத்தப்படும். அதனடிப்படையில், பயிா் மகசூல் கணக்கீடு செய்யப்பட்டு, உத்தரவாத மகசூலுடன் ஒப்பீடு செய்து பயிா் இழப்பீடு தொகை வழங்க இயலும். சில வட்டாரங்களில் ஆங்காங்கே பயிா் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும்போது விவசாயிகள் இடையூறு செய்வதாக பயிா் காப்பீடு நிறுவனம் புகாா் அளித்துள்ளது.

இத்தகைய நிலை ஏற்பட்டால் பயிா் மகசூல் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடு தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் தங்கள் கிராமங்களில் நடைபெறும் பயிா் அறுவடை பரிசோதனையை எவ்வித இடையூறும் இன்றி நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.