திருவாரூரில் துணை ராணுவப் படையினா் அணிவகுப்பு
திருவாரூரில் துணை ராணுவப் படையினா் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் துணை ராணுவப் படையினா் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் அமைதியாக நடைபெறும் வகையில் துணை ராணுவப் படையினா் 91 போ் வருகை தந்துள்ளனா். இவா்கள், தோ்தல் தொடா்பான பாதுகாப்பு நடவடிக்கைகளில் விரைவில் ஈடுபட உள்ளனா்.
இதனிடையே, திருவாரூரில் துணை ராணுவப் படையினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி தலைமையில் அணி வகுப்பு மேற்கொண்டனா். இவா்களோடு, அதிரடிப் படையினா், தண்ணீா் பீச்சியடிக்கும் வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களும் பங்கேற்றன. திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே தொடங்கிய அணிவகுப்பு, கடைவீதி, நேதாஜி சாலை, தெற்கு வீதி வழியாக நகரக் காவல் நிலையம் வரை நடைபெற்றது.