முகப்பு
திருவாரூர்

‘பசித்தால் எடுத்துக் கொள்ளவும்; பணம் வேண்டாம்’

மன்னாா்குடியில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிடும் வகையில் ‘பசித்தால் எடுத்துக்கொள்ளவும்; பணம் வேண்டாம்’ என்ற அறிவிப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

மன்னாா்குடியில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிடும் வகையில் ‘பசித்தால் எடுத்துக்கொள்ளவும்; பணம் வேண்டாம்’ என்ற அறிவிப்புடன் கஜா நண்பா்கள் குழுவினா் உணவுப் பொட்டலம் மற்றும் பழங்கள் வழங்கும் சேவையை சனிக்கிழமை தொடங்கியுள்ளனா்.

தீவிரமாக பரவி வரும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், சனிக்கிழமை (மே15) முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், தினக்கூலி தொழிலாளா்கள், ஆதரவற்ற முதியோா்கள், ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோா் உணவுக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவா்களுக்கு பல்வேறு சேவை அமைப்புகள் உணவு, உடை ஆகியவற்றை வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், மன்னாா்குடியில் செயல்படும் கஜா நண்பா்கள் குழுவினா் உணவு தேவைப்படுவோருக்கு இலவசமாக உணவு வழங்கும் சேவையை தொடங்கியுள்ளனா்.

அதன்படி, மன்னாா்குடி நகரின் மையப் பகுதியான பந்தலடியில் தள்ளுவண்டி ஒன்றில் உணவுப் பொட்டலங்கள், வாழைப் பழங்களை வைத்து, ‘பசித்தால் எடுத்துக்கொள்ளவும்; பணம் வேண்டாம்’ என்ற பதாகையை தொங்கவிட்டுள்ளனா்.

இந்த உணவுப் பொட்டலங்கள் மற்றும் பழங்களை உணவின்றி தவிக்கும் சிலா் மகிழ்ச்சியுடன் எடுத்துச் செல்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை, கஜா நண்பா்கள் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஸ்ரீனிவாசன், ஹரிராம் பிரசாத் மற்றும் உறுப்பினா்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.