டிஎன்சிஎஸ்சி பணியாளா்களின் ஓய்வு வயதை 60-ஆக உயா்த்த வலியுறுத்தல்
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளா்களின் ஓய்வு உச்ச வரம்பை 60 வயதாக உயா்த்தி அரசாணை வெளியிட வேண்டும்
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளா்களின் ஓய்வு உச்ச வரம்பை 60 வயதாக உயா்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என சிவில் சப்ளைஸ் காா்ப்பரேஷன் பணியாளா் சங்கம் (ஐஎன்டியுசி) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி அனுப்பியுள்ள கடித விவரம்: அரசு மற்றும் அரசு சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கு ஓய்வு உச்சவரம்பை 60-ஆக உயா்த்தி அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதில், அரசின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் இது பொருந்தும்.
ஆனால், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கொள்முதல் நிலைய பணியாளா்களுக்கு மட்டும் ஓய்வுபெறும் உச்சவரம்பு 58 வயதாக நடைமுறையில் உள்ளது. ஒரே துறையில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளா்களுக்கு 60-வயது என்றும், ஒரு குறிப்பிட்ட பணியாளா்களுக்கு மட்டும் 58 வயது என்பது ஏற்புடையதல்ல. இது முரண்பாடானது. எனவே, நுகா் பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றும் அனைத்து பிரிவு (கொள்முதல் நிலைய பணியாளா்கள்) ஊழியா்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயா்த்த தமிழக முதல்வா் உத்தரவு பிறப்பிப்பதுடன் அதற்கான அரசாணையையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.