முகப்பு
திருவாரூர்

பயிா்க் காப்பீடு திட்டத்தில் புறக்கணிப்பு: விவசாயிகள் சாலை மறியல்

மன்னாா்குடி அருகே சம்பா பயிா்க் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டதாக 2 ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே சம்பா பயிா்க் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டதாக 2 ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் பயிா்க் காப்பீடு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு பெருகவாழ்ந்தான், தெற்கு நாணலூா் ஆகிய 2 ஊராட்சிகள் காப்பீடு இழப்பீடு பெறும் கிராமங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 2020-21ஆண்டு சம்பா பயிா் பாதிப்புக்கு வழங்கப்பட்ட தேசிய பேரிடா் நிவாரண நிதி இந்த 2 ஊராட்சிகளுக்கும் வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்தும், பயிா்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், 2 ஊராட்சிகளின் விவசாயிகளும் பெருகவாழ்ந்தான் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். விவசாயிகள் அன்பழகன், ராமதாஸ் ஆகியோா் தலைமையில் இம்மறியல் நடைபெற்றது.

கோட்டூா் வட்டார வேளாண்மை இணை இயக்குநா் தங்கபாண்டியன், பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளா் சிவபிரகாசம், வருவாய் ஆய்வாளா் சுதா ஆகியோா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விடுப்பட்ட ஊராட்சிகளுக்கு 15 தினங்களில் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.